நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான மஹாநடி படத்தின் இசை வெளியீடு, இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ள இப்படத்தில், நடிகை சமந்தா, மதுரவாணி எனும் பத்திரிகையாளராகவும், அவருக்கு ஜோடியாக விஜய் அந்தோணி என்ற கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சமந்தா, இப்படத்தில் நடித்தது தனக்கு மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம் என்றும், தனது கதாபாத்திரத்தின் பார்வையில் தான் ஒட்டுமொத்த படமும் விரிகிறது என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும், கீர்த்தி மற்றும் துல்கரின் நடிப்பினை புகழ்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டா ஒரு ராக்ஸ்டார் என்றார்.
இப்படத்தில் நடித்தது மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவம் என கூறிய சமந்தா, படத்தின் ஒரு முக்கிய காட்சியில் அழ வேண்டியிருந்தும், கிட்டத்தட்ட எட்டு முறை ரீடேக்குகள் போயும் கூட, கிளிசரின் பயன்படுத்தாமலே கண்களில் கண்ணீர் தளும்ப நடித்ததாக கூறினார். எட்டு முறை ஒரே காட்சியை எடுத்தும் கூட கிளிசரின் போடாமல் உணர்ச்சிவேகத்தில் நிஜ கண்ணீரை கொட்டி நடித்த சமந்தாவை, அனைவரும் வியந்த வண்ணம் உள்ளனர். மஹாநடி மே ஒன்பதாம் தேதி வெளியாகிறது.