தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வேதனை........

SIBY HERALD
1.ஐந்து வயது முதல் பத்து, பனிரெண்டு வயதுக் குழந்தைகள்,விரக தாபத்துடன் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அத்தகைய பாடல்களுக்கு அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.


2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.


3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். மாபெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைக்கப்படுகிறது


4.  நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களும் பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடுவர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த வேதனையான வேலையை, அதன் வீரியமான விஷத்தன்மையை உணராமல் மகிழ்ச்சியாகவே  செய்வது மேலும் வேதனை.


குழந்தைகளிடம் இப்படி தகாத, தவறானமுறையில் பாலியலைஅறிமுகப்படுத்துவது பற்றி சிறிதும்  கவலைப்படுவதில்லை. வல்லுறவு மட்டுமே பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.


நண்பர்களே இதில் பங்கு பெறும் குழந்தைகள் மட்டுமல்ல,இதைப் பாரக்கும் குழந்தைகளும் இந்த ஆபத்தான சுழலில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் இத்தகைய நிகழ்ச்சிகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் -  நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!


நம்மால் செய்ய முடிந்து, இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் இருந்தால், குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.


இந்த சிறு குழந்தைகள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசமான வரிகள் - மனம் வேதனைப்படவில்லை என்றால் நாம் அவர்கள் குழந்தைமை சூறையாடப் படுவதை உணரவில்லை என்றுதானே பொருள்?
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாட வைக்கும் வக்கிரப் பாடல்களைப்  பதிவிடக்கூட மனம் துணியவில்லை.


குறைந்தபட்ச நடவடிக்கையாக, பாடப்படும் பாடல் தெரிவிலாவது சில அளவு கோல்களைப் பின்பற்ற முன்வர வேண்டும் என்பது எங்களதுவேதனையான  வேண்டுகோள்.


இந்த அவலத்தைத் தவிர்க்கவோ தட்டிக் கேட்கவோ எந்த ஒரு ஊடகவியலாளரோ, சமூக நல ஆர்வலரோ, குழந்தைகள் நல ஆர்வலரோ ஏன் முன்வரவில்லை என்பதும் ஒரு  ஆதங்கம்.


இதைப் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே பெருமையுடனும், ஆர்ப்பரிப்புடனும் உட்கார்ந்தது ரசிப்பதுதான் உச்சகட்ட வேதனை.


Credits to Ms.Gayatri Stephen



Find Out More:

Related Articles: